திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 16 – பாபா நளினி

முக்திநாதனை  சேவித்த திருப்தியில்   அனைவரும்    விமானம்   ஏறினோம் .மீண்டும்   பொக்காரோ  வந்து  சேர்ந்தோம் .

உலகத்திலுள்ள 14 மலைகளுள், 8 மலைகளைத்தன்னகத்தே கொண்ட அழகான நாடு நேபாளம்

மனகமனா  கோவில்

மனகமனா தேவி ஆலயம் , 1302 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது

காட்மாண்டுவிலிருந்து   90 கிலோமீட்டர்   தொலைவில்   மலைமீது அமைந்துள்ளது .நேபாளத்தின்  முதல்  கேபிள்  கார்  திட்டம் இங்குதான்   செயல்படுத்தப்பட்டது .
மனகமனா கேபிள் கார் மர்ஷியாங்க்டி பள்ளத்தாக்கு கேபிள்கார் கடக்கும் தூரம் -3.1 கிலோமீட்டர்.
15லிருந்து 20நிமிடங்கள் ஆகும்இந்த  கோவிலும்  பகோடா  அமைப்பில் தான்  அமைக்கப்பட்டுள்ளது .
மனகமனா கோவில் ( பகோடா அமைப்பில் )
ஒரு  நாளைக்கு 500 முதல்  2000 பக்தர்கள்  அம்மனை   தரிசிக்க  வருகின்றனராம் .அவ்வளவு  சக்தி வாய்ந்த   கோவிலாக   மக்கள் கருதுகின்றனர் .சுயம்பு  அம்மன் .பூமியிலிருந்து   தானாகவே  தோன்றியவர் .கருவரைக்குள்ளே   ஒரு  வட்ட  வடிவில்
 ஒரு பள்ளம்  இருக்கும் .அங்கு  ஒரு பாறையின் நடுவே   கல் ஒன்று  காணப்படும் .இந்தக்கல் தானாகவே  பூமியிலிருந்து முளைத்துவந்தது  என்றும் ,மேலும்    கல்லின்   அடியில்   பூமியின்   ரேகை  செல்வதாகவும்   கூறுகிறார்கள் .
நாங்கள்  சென்ற  போது மிக நீ…………..ண்…………ட  வரிசை  காணப்பட்டது .எப்படியோ  அங்கு  பாதுகாவலுக்கு  இருக்கும் காவலர்களைக்  கெஞ்சி,   வெறும்  தரிசனம்   மட்டும்தான்  என்று   கூறி ,  அம்மனை   தரிசித்தோம் .உருவமோ , சிலையோ கிடையாது .ஏகப்பட்ட  ஆடு மாடுகள்—-பலியிடுவதற்கு   தயாராக  இருக்கும் . இரத்தம்  சொட்ட சொட்ட   ஆட்டின்  தலையை   ஒருவர்  கொண்டு  செல்வதை  பார்த்தேன் . ( மேனகா காந்தி   கவனிக்க )  ஏதோ  காய்கறி   எடுத்துச் செல்வதைப்போல்   எந்த  சலனமுமில்லாமல்  இயல்பாகச்  சென்றார் .
 ஆலயம் தரைமட்டத்திலிருந்து   1302  மீட்டர்   உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது  .கேபிள்  காரில்தான்  செல்ல வேண்டும் .
கேபிள் கார் கடக்கும் தூரம் 3.1 கிலோமீட்டர்
ஒரு  வழிப்பாதைக்கு     20  நிமிடங்கள்   ஆகும் .காத்திருக்க  வேண்டிய அவசியமில்லாமல்  கேபிள்  கார்  சேவை   மிகவும்   துரிதமாக   நடக்கும் .மேலிருந்து  காண்பதற்கு மிகவும்  ரம்மியமாக  இருக்கும் .

திருசூலி நதி–கேபிள்காரிலிருந்து

கேபிள்காரிலிருந்து   பார்த்தால்  திருசூலி  நதி ,மர்ஷியாண்டி  பள்ளத்தாக்கு ,  வடக்கு  அன்னபூர்ணா ,  மனஸ்லு ,  ஹிமல்சுலி  மலைத்தொடர்கள் என்று  அநியாயத்துக்கு   இயற்கையை  ரசிக்கலாம் .
இதுவரை   எந்த  விபத்தும்   நடந்ததில்லையாம் .எல்லாம்   நேரப்படி ,முறைப்படி   நடக்குமாம் . பக்தர்களின்  மனதில் ஏற்படும்  நியாயமான  விருப்பத்தை    நிறைவேற்றும்  கடவுள்   என்பதுதான்  ”மனகமனா” என்பதற்கு  அர்த்தம்— (மன என்றால்  மனது ,  கமனா என்றால் விருப்பம்  )   ஒருவர்  தவறு  செய்தாரா  இல்லையா  என்று  கண்டுபிடிக்க ,இங்கு  வந்து   சத்தியம்   செய்ய   சொல்வார்களாம் . பொய்  சத்தியம்  குல நாசம்  என்று  அம்மனுக்கு  பயந்து உண்மையைத்தான்   கூறுவார்களாம் .( வக்கீல்  செலவு  மிச்சம் ). கேபிள்கார்  மூலமாக   கீழே  வந்து  சேர்ந்தோம் .
ஒரு  குறிப்பு—( மனகமனா கோவிலை  தரிசித்தபிறகுதான்  முக்திநாத் செல்வோம் )
குப்தேஷ்வர்  மஹாதேவ்   குகை

<

குகைக்குள் படம் பிடிக்கும் போது காமரா லென்ஸில் படுவது

மிகவும்  அருமையான  ஆச்சரியமான   இடங்களுள்   இதுவும்  ஒன்று . தரை  மட்டத்திலிருந்து  100 அடி கீழே  இறங்கி செல்லவேண்டும் . தலைக்கு  மேலே   பாறைகள் ;   ( உயரமானவர்கள்  குனிந்துதான்  செல்லவேண்டும் .)  பாறைகளிலிருந்து  கசியும்  நீர் ,   இருட்டு  ( கும்மிருட்டு ) ,ஆங்காங்கே  குறைந்த  வெளிச்சம்  தரும்  மின்விளக்குகள்   நமக்கு  முன்னும் பின்னும்  யார்  இருக்கிறார்கள்  என்பதே  தெரியாது .  மெதுவாகப்பேசினாலே  எதிரோலி  கேட்கும் . என்று   வித்தியாசமான   சூழலை  அனுபவிக்கலாம் .
இந்த குகை  இரண்டாக  பிரிக்கப்பட்டிருக்கும் .முதல் பகுதி  –40மீ  நீளம்—லிங்கரூபத்தில்   சிவபெருமானை   தரிசிக்கலாம் . முதற்பகுதியில்   புகைப்படம்  எடுக்கக்கூடாது . சில  இடங்களில்   படிக்கட்டுக்கள்   அமைக்கப்பட்டிருக்கும் . மேலே  பாறைகளிலிருந்து  கசியும் நீரால்   ஈரமாகத்தான்  இருக்கும் .மிகவும்   கவனமாகத்தான்  செல்லவேண்டும் .
பாறைகளில்  தலை  இடிக்காமல் , கால்கள்   சறுக்காமல்,  நமச்சிவாய  என்று  ஐந்தெழுத்து   மந்திரத்தை  ஜபித்துக்கொண்டே செல்லலாம் கீழே  செல்ல செல்ல  இலேசாக  மூச்சடைப்பது  போல்  தோன்றும் . கீழே  இறங்கியதும்  ( 100மீட்டர் ) அங்கு  ஓர்  நீர்வீழ்ச்சியைக்காணலாம்  .அதிசயம் !ஆச்சரியம் ! ஆனால்  உண்மை .டேவிஸ்  ஃபால் ( devis  fall )  எனப்படும்   இந்த  நீர்வீழ்ச்சியை  குப்தேஷ்வர்  குகையின் மேற்  வாயிலுக்கு  ( entrance )  எதிர்ப்புரம்  100மீட்டர் தொலைவில்   சென்று   காணலாம் .

இருட்டான குகையின் முடிவில் (100மீட்டர் ) இரு பாறைகளுக்கு இடையே தெரிவது நீர்வீழ்ச்சியும் வெளிச்சமும்

   ” டேவிஸ்   நீர்வீழ்ச்சி’

டேவிஸ் ஃபால்ஸ் –நீர்வீழ்ச்சியைப்பற்றிய விவரம்

”பேவா ( pheva )  என்ற ஏரி யிலிருந்துதான்   இந்த  நீர்வீழ்ச்சிக்கு   தண்ணீர் வருகிறது .பேரிரைச்சலுடன் பாறைகளின் மீது  மோதி.  பின்   பூமியில்   காணாமல்  போய்விடுகிறது .இந்த  நீர்வீழ்ச்சியைத்தான்  குப்தேஷ்வர்  குகையில் 100அடி  பள்ளத்தில்  காணலாம் .
                                                    நாராயணி  நதி
நாராயணி  நதி—-( white  river)இங்கும்  ஆச்சரியம்தான் .நதிநீர்  பால்  போல்  வெண்மையாக
இருக்கும் .
 
வெண்மையான நிறத்தில் ஓடும் நதி
காளிகண்டகி  நதியின்  ஒரு  பிரிவு தான் இது .நேபாளத்தின் தென்மேற்குப்பகுதியில்  காணப்படுகிறது.வெண்மை நிறம்  குறித்து  ஒருவருக்கும்  எதுவும் தெரியவில்லை .
அன்பார்ந்த  வாசகர்களே!  வாழ்க்கையில் முதன்முதலாக  அடியேன் ஆன்மீகத்தொடரை   எழுத  ஆரம்பித்துள்ளேன் . ஏதேனும்  சொற்பிழை , பொருட்பிழை இருந்தால்  மன்னிக்க  வேண்டுகிறேன் . இத்தொடரை  எழுதத் தூண்டிய  ஷஹி  அவர்களுக்கு முதற்கண்  என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் .
அடியேனுக்கு  கணிணி  பற்றி  ஓரளவுக்குத்தான்  தெரியும் .காமராவிலிருந்து புகைப்படம்  எடுத்து  கணிணியில் போடுவது  எப்படி ,  மேலும்  கூகுளில்  எப்படி  போடுவது ,  எப்படி  மெயில் செய்வது என்பது  பற்றிஎல்லாம்  ஒன்றும்  தெரியாது . ( இப்பொழுது  அறிந்து  கொண்டேன் .) இது போன்ற  பற்பல  உதவிகள்  செய்த  எனது  அருமை செல்வங்கள்–ஆதித்யா ,சம்யுக்தா இவர்களுக்கு மிகவும்  கடமைப்பட்டிருக்கிறேன் .
உதவி  செய்த  கணவருக்கும்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .கயிலை நண்பர்கள்–காஞ்சிபுரம்  ஸ்ரீநிவாசன் அவர்கள், வேதமூர்த்தி அவர்கள் ,மலேசிய நண்பர் தாமோதரன்  அவர்கள் , சென்னைத்தோழி—துருபர்வாணி–இவர்களுக்கு  மிகவும்   கடமைப்பட்டிருக்கிறேன் .
மேலும்  திருக்கயிலாய மானசரோவர்  முக்திநாத்   யாத்திரை  செல்ல  விரும்பும்  அன்பர்கள்  அடியேனை  இ-மெயிலிலும், தொலைபேசியிலும்  தொடர்பு  கொள்ளலாம் .   rudhrababa@gmail.com  mobile: 9003029792
யாத்திரைக்கு   செல்வதற்கு  முன் பின்வருமாறு உங்களை  தயார்படுத்திக்கொள்ளுங்கள்:
 
6 மாத கால  மூச்சுப்பயிற்சி, (பிரணாயாமம் ),தினமும்  5 கிலோமீட்டர்  நடைப்பயிற்சி , காலை  மாலை  யோகா பயிற்சி ,
 அவரவர்  சௌகர்யப்படி   தியானம்  செய்தல் ,தியானத்தில்  இஷ்ட தெய்வத்தை  மனதில்  இருத்தி   கயிலையில் இருப்பது போல்  கனவு  காணவேண்டும்  (  அப்துல்கலாம்  அவர்களுக்கு  நன்றி ).
 யாத்திரைக்குப்பணம்  செலுத்துவதற்கு  முன்  மருத்துவரிடம்  சென்று  உடல்  பரிசோதனை  செய்துகொள்ளவேண்டும் .இல்லாவிட்டால்  பணம்  விரயமாகும் .
 
தேவையான  பொருட்கள்;
1. தெர்மல் உடை, ( உடல்  வெப்பத்தை  சீராக  வைக்க )
2.தண்ணீர் புகாத  ஜெர்கின் உடை& பேண்ட்
3.மங்கிகேப் (monkey cap)
4.தண்ணீர் புகாத  கையுறை (2 ஜோடி )
5.ஈரம்  புகாத  ஷூ , உல்லன்  ஸாக்ஸ்
6.( 2 ஜோடி ) ஸ்வெட்ட்ர்
7.கண்களுக்கு  குளிர்கண்ணாடி
8.மூக்கில் கட்டிக்கொள்ள வலைத்துணி (கடைகளில்  கிடைக்கும்)
9.கண்டிப்பாக வெந்நீர்  ஊற்றி குடிக்க  தெர்மல் பிளாஸ்க்
10.அவரவர்களுக்கு தேவையான  மாத்திரைகள் ,முக்கியமாக  டையாமெக்ஸ்( diamex)  என்ற  மாத்திரை  வாங்கிக்கொள்ள வேண்டும்
11.பாதாம் , முந்திரி ,பிஸ்கட்  சாக்லேட்  வகையறாக்கள் ,பிடித்த  நொறுக்குத்தீனிகள் ,ஆல்பகோடா  பழம்
12.காலைக்கடனை  முடித்த  பிறகு  துடைத்துக்கொள்ள  ஒரு ரோல்  டிஷ்யு  பேப்பர்
13.டார்ச் லைட்
14. புகைப்படக்கருவிக்கு தேவையான  பேட்டரிகள்–கூடுதலாக  எடுத்துக்கொள்ளவேண்டும்
15. முதுகில்  சுமக்க  ஒர்  பை , மற்றும்  அவரவர்களுக்கு தேவையான  பொருட்கள் .
மேற்கூறியவைகளுடன்  மிக மிக  முக்கியமாக  -தன்னம்பிக்கையுடனும் ,தெய்வநம்பிக்கையுடனும்   யாத்திரை மேற்கொண்டால்  எல்லாம்  சுபமாக  முடியும் .

பிழை இருந்தால் மன்னிக்கவும் . மீண்டும் வேறு ஒரு தொடரில் சந்திப்போம் .

  ” எல்லாம்  அவன்  செயல் ”
”சர்வம்  க்ருஷ்ணார்ப்பணம் ”
மீண்டும்  சந்திப்போம் ‘
..பாபா நளினி ..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Article written by

Please comment with your real name using good manners.

Leave a Reply