இந்திய கிரிக்கெட் அணி – ரசிகர்களே -
விழித்துக் கொள்ளுங்கள்!
உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் சங்கம் நமது பிசிசிஐ. உலகிலேயே அதிக வருமானம் கொடுக்கும் போட்டியாக இருப்பது நமது ஐபிஎல் தான். அதிக பணம் சம்பாதிக்கும் வீரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மவர்களே. சரி, பெருமை பட வேண்டிய விஷயமா இது? நிச்சயமாக இல்லை.கிரிக்கெட் என்ற அருமையான விளையாட்டு நமது அரசியல் முதலைகளிடம் சிக்கிக்கொண்டதே இந்த தோல்விகளுக்கு காரணம். அரசியல். வீரர்கள் தேர்வு முதற்கொண்டு ஆட்டத்தில் விளையாடும் பதினொன்று வீரர்களை முடிவு செய்தல் வரை அனைத்திலும் அரசியல்.
வெளிநாடுகளில் கடைசியாக நாம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டியிலும் தோல்வியையே தழுவினோம். இதைப் பற்றி கவலைப்பட ஆளில்லை. சேவாக் என்னவென்றால் ” நாங்கள் இன்னும் உலகின் தலைசிறந்த அணி”யென்று கூறியுள்ளார். ஐயா சாமி, சுமாரான ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்த எந்த அணியும் சிறந்த அணியாக முடியாது. உள்நாட்டில் சொங்கி மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்தால், நாம் சிறந்தவர்களாக முடியுமா? உலகக்கோப்பையெல்லாம் வென்றோமே? நாம் ஏன் சிறந்த அணி கிடையாது என்பவர்களுக்கு, நண்பர்களே நாம் சந்தேகத்திற்கிடமின்றி சிறந்த அணி தான், ஒரு நாள் போட்டியில். குறிப்பாக உள்நாட்டில்.சரி நாம் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இருந்தோமே? தலைவா, நாம் இலங்கை, தென் ஆப்பிரிக்கவுடன் ட்ரா செய்தோம், ஆஸ்திரேலியாவை உள்நாட்டில் வென்றோம், அதுபோக வெளிநாட்டில் நாம் வென்றது சின்ன பசங்களான நியூசிலாந்த் மற்றும் பங்களாதேஷ். இந்தியா ஏன் தலைசிறந்த டெஸ்ட் அணியில்லை என்பதை இங்கிலாந்து தெள்ள தெளிவாக விளக்கியது.
நாம் வெளிநாட்டிலும் வெற்றி பெற என்ன வழி? டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிப் படிக்கட்டில் மீண்டும் ஏற என்ன வழி? முதலில் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
கேப்டன் மாற்றம்.
ஏன் என்று கேட்பவர்கள், எனது முந்தைய பதிவுகளான தோனி, போ நீ(1), தோனி, போ நீ(2) - ஐப் பார்க்கவும்
முப்பத்தி ஏழாயிரம் ஒட்டங்கள், 104 சதங்கள், 174 அரை சதங்கள். இவையெல்லாம் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆதியோரின் கூட்டு சாதனைகள். நான் கூற வருவது இவை அனைத்தும் சரித்திரம் என்பதே. இன்னும் ஆறேழு மாதங்களுக்கு இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகள் கிடையாது. முறையே 38,39,37 வயதுடைய இவர்கள் இனிமேல் அடிக்க வாய்ப்புண்டு என்பது மறுப்பதற்கல்ல. இன்னும் இரண்டு வருடங்களுக்கு வெளிநாடுகளில் ஆடாத இந்திய அணிக்கு இவர்களது சேவை தேவைப் படாது என்பதே உண்மை. இது இள ரத்தங்கள் உள்ளே புகுத்தப்பட வேண்டிய காலம். இல்லை, இவர்கள் இல்லாமல் இந்திய அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பவர்களுக்கு, இந்த ஜாம்பவான்கள் உள்ளே நுழைந்த போது இவர்களும் இள ரத்தம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளில், உலகின் சிறந்த பாட்ஸ்மேன்கள் திணறிய போது, எந்த பயமும் இல்லாத கோஹ்லி, சாஹாவின் ஆட்டம் ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்லிற்று. அது,” ஒரு சகாப்தம் முடிவிற்கு வந்தது”
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





நமது கிரிக்கெட் ஆட்டக்காரர்களை சதுரங்க காய்களாய் நகர்த்தி பணம் சம்பாரிக்கும் பிசிசியை பண முதலைகளுக்கு இந்தப் பதிவு ஒரு சாட்டையடி அர்ஜுன் ! பாராட்டுக்கள்!
Thanks moonramkonam….