எஸ்.என்.லட்சுமி – சினிமாஞ்சலி -
மாட விளக்க ஆரு இப்போ வீதியிலே ஏத்துனா?
விருமாண்டி படத்தில் எஸ்.என்.லட்சுமி இறக்கையில் கமல்
“மாட விளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லிக பூவ யாரு இப்போ வேலியில சாத்துனா “
என பாடுவார். அந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் ஒரு இனம் புரியா சோகம் மனதைப் பிசையும். இளையராஜா இசையில் ஒப்பாரி வகை பாடல் அது. இப்போது நிஜமாகவே தமிழ் சினிமாவின் மாட விளக்கு அணைந்து விட்டது. பல தலைமுறை கண்ட பழம்பெறும் நடிகை எஸ்.என்.லட்சுமி இறந்து விட்டார்.
எஸ்.என். லட்சுமி நான்கு தலைமுறையாக நடித்தவர். ஒரு ஏழைக் குடும்பத்தில் 11 அண்ணன் ஒரு அக்காவுடன் பிறந்த 13வது கடைக்குட்டி தான் எஸ்.என்.லட்சுமி. சின்ன வயதிலேயே நாடகம் வழியே நடிக்க வந்து விட்டார் எஸ்.என்.லட்சுமி. இயறகையிலேயே திறமையான அவர் விருந்து நகரில் இருந்து வாய்ப்பு தேடி சென்னை வந்தார். தாமரைக் குளம் என்ற படம் தான் அவரை கோடம்பாக்கத்தில் வெளிச்சம் போட்டு காட்டியது. சந்திரலேகா அந்த காலத்தின் மிக பிரம்மாண்டமான படம். அந்த சந்திரலேகா படத்தில் ஒரு ட்ரம்ஸ் நடனம் (கிளைமேக்ஸ் காட்சி) மிக பிரபலமான ஒன்று.அந்த பிரபலமான ட்ரம்ஸ் நடனத்தில் மூன்றாவது ட்ரம் மீது நின்று ஆடியவர் தான் எஸ்.என்.லட்சுமி. ஆமாம், இன்று நடிப்பில் சக்கை போடுபவர் அன்று ஒரு அருமையான டான்சராகத்தான் திரியயில் நுழைந்தார். கும்மி, டான்ஸ் என்று இருந்தவர் சினிமாவுக்காக கத்திச் சண்டையும் கற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர். நடித்த ’பாக்தாத் திருடன்’ படத்தில் பயமில்லாமல் சிறுத்தையுடன் சண்டையிட்டு எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார்.
திரையில் ஜொலித்த அவர், தன் பர்சனல் வாழ்க்கையில் அதிகம் சோகங்களையே சந்தித்தவர். தான் திருமணம் செய்துகொள்ளாமல் அண்ணன் குழந்தைகளுக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். வயதான காலத்தில்கூட ஓய்வெடுக்காமல் சாகும் வரை நடித்தவர். பார்க்க சாதுவாகத் தோன்றினாலும் தைரியசாலி. ஸ்டுடியோவுக்கு தானே காரை ஓட்டி வருவார் எஸ்.என்.லட்சுமி.
தமிழில் கமலுடன் அவர் நடித்த படங்கள் மட்டுமே ஏராளம். மைக்கேல் மதன காமராஜனில் குறும்பு பாட்டியாக வந்து அவர் திருட அதை அவர் பேத்தி ஊர்வசி சமாளிக்க , கமல் ஊர்வசி ஃப்ர்ஸ்ட் நைட்டில் எஸ்.என்.லட்சுமி மேலேயிருந்து டெல்லி கணேஷிடம், “பையன் மாட்டேண்றான்” என்று சொல்ல டெல்லி கணேஷ் சங்கோஜப்பட , அதையெல்லாம் மறக்க முடியுமா? அவரின் காமெடி சென்சுக்கு அந்தப்படம் ஒரு உதாரணம். மகாநதியில் கமலின் மாமியாராக வருவார். மிகச் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமாக தன் முத்திரையை பதிவு செய்திருபார் எஸ்.என்.லட்சுமி.
ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டது. மாட விளக்கு அணைந்திருக்கலாம்.. ஆனால் மனதில் எரிந்து கொண்டு தான் இருக்கும்!
- அபி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Please comment with your real name using good manners.