ரஜினி பிறந்தநாள் ஷஹி கட்டுரைக்கு பதில் – அபி
அன்பும் எரிச்சலும் உள்ள ஷஹிக்கு ,
உங்கள் கட்டுரை படித்தேன். அதில் சில சந்தேகங்கள் …
1. கட்டுரையை விடவும் அதைப் வெளியிட்டிருந்த நேரம் உண்மையிலேயே ஆச்சர்யபடுத்தியது. சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணி நெருங்கும் நேரம். பிறந்த நாளில் இதுதான் ஒருவருக்கு வாழ்த்து சொல்லும் அழகா?
2. ஆரம்பம் பார்த்தோம்… நேரே முடிவுக்கு போகலாம் எரிச்சலுடன் ஷஹி என முடித்திருக்கிறீர்கள்.. அது எரிச்சலா இல்லை வயிற்றெரிச்சலா?
3. இனி நடுவில் நீங்கள் எழுதிய “அரிய” கருத்துக்களை பார்ப்போம்… ஹீரோ வர்ஷிப் கூடாது என்கிறீர்கள் ஆனால் ஏன் என குறிப்பிடவில்லை. அதோடு இந்த ஹீரோ வர்ஷிப் எந்த நாட்டிலும் இல்லை என்கிறீர்கள். அது முற்றிலும் தவறு. நீங்கள் அமெரிக்காவில் பாப் சாங்க் பாடும் கிளப் பாடகருக்கு கூட அவர்கள் அளிக்கும் ஹீரோ வர்ஷிப்பை பார்த்தில்லை. ஆர்னால்டும், ஜாக்கி சானும் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹீரோ வர்ஷிப் என்பது சினிமா ஹீரோக்களுக்கு மட்டுமே செய்வது அல்ல. காந்தியின் பின்னால் கூடிய கூட்டம் கூட ஒரு ஹீரோ வர்ஷிப் தான். இன்றும் பிரபாகரனை தெய்வமாக நினைப்பவர்கள் உண்டு. நீங்களே பல முறை மூன்றாம் கோணத்தில் ஜெயமோகனையும், மனுஷ்யபுத்திரனையும் எஸ்ராவையும் சங்கோஜமில்லாமல் ஹீரோ வர்ஷிப் செய்து புகழ்ந்து சிலாகிப்பதை நான் படித்திருக்கிறேன். ஆக, ஹீரோ வர்ஷிப்பால் என்ன கஷ்டம் என தெரியவில்லை.
4. டிவியிலும் ரேடியோவிலும் காட்டுகிறார்கள் என்றால் மக்கள் விரும்புவதை அவர்கள் காட்டுகிறார்கள். இவ்வளவு ஏன் நீங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கும் மூண்றாம் கோணத்திலும் நீங்கள் ரஜினி பற்றித்தானே போட்டி நடத்துகிறீர்கள்? கோடானுகோடி மக்கள் மனதில் இடம் பிடித்தது ரஜினி செய்த தவறா?
5 அவர் என்ன செருப்பு போடுகிறார் என்பதா முக்கியம் என கேட்டிருக்கிறீர்கள்… செருப்பு அல்ல அங்கே பார்க்கப்படுவது. ஒரு மனிதன் எந்த அளவு வெளிப்பூச்சு இல்லாமல் எளிமையாக வாழ்கிறான் என பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடமது ! எளிமையோ பேனா மையோ உங்களை பொறுத்தவரை சின்ன விஷயம் தான் என்பது உங்கள் கட்டுரையை படித்தாலே புரிகிறது !
6. அவர் ராஜ வைத்தியம் செய்து கொண்டார் என குமுறுகிறீர்கள்? ஏன், இந்தக் கோபம்? ஒரு மனிதன் தன் உழைப்பால், அரசியல்வாதிகள் போல் சுரண்டாமல் சம்பாதித்த தன் காசை தன் உயிர் பிழைக்க பயன்படுத்தியதில் தவறு காண அறிவு ஜீவிகளால் மட்டுமே முடியுமென்றால் நான் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறேன்!
7. இதுவரை வாழ்ந்ததே போதுமாம் ! இனிமேல் வாழும் நாட்கள் இறைவன் அளித்த கொடையாம். ஆஹா என்ன ஒரு தாராளம். இன்னொரு மனிதனின் ஆயுட்காலம் போதுமென்று தீர்மானிக்க நீங்கள் யார்? நம் வீட்டில் ஒரு முதியவரென்றால் “இதுவரை வாழ்ந்ததே அதிகம்” என நாம் விட்டு விடுவோமா?
8. ரஜினி ரசிகன் தன் வாழ்க்கையை மறந்து குடும்பத்தை மறந்து ரஜினியே வாழ்க்கை என வீணாவதை நான் ஆதரிக்கவில்லை. அதையெதிர்த்து நான் எழுதிய பதிவு இங்கே ஆனால் ஒரு ரசிப்புத்தன்மை கூட இல்லாமல் அவர் பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என்றால் எப்படி? நாம் வாழ்வது என்ன ஹிட்லர் ஆட்சியா?
9. மக்களுக்காக என்ன செய்தாராம்? நீங்கள் ஓட்டுப் போட்டு பல முறை அரியணையில் வைத்தவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை “அரசியலே வேண்டாம். எனக்கு அதற்கு தகுதியில்லை” என தள்ளி நிற்பவரிடம் கேட்கிறீர்கள்… உங்களுக்கு ரஜினி செய்த நல்லது, அவர் அளித்த நன்கொடைகள், அவர் இருந்த உண்ணா விரதம் என சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனாலும் ஏன் சொல்ல வேண்டும்? ஒரு நடிகனென்றால் இதெல்லம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமா? நீங்கள் மாறி மாறி ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களிடம் போய் கேளுங்கள், தைரியமிருந்தால் !
தயவு செய்து உங்கள் அறிவு ஜீவித்தனத்தை வேறு விஷயங்களில் காட்டுங்கள் ! ஏதோ என் போன்றவர்கள் தங்கள் விருப்பமானவரின் பிறந்த நாளில் அவர் எளிமையைப் போற்றுகிறார்கள் என விட்டு விடுங்கள்.. தேவையில்லாமல் ரஜினி ரசிகர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்.
எரிச்சலுடன் இல்லாமல்,
அன்புடனும் தலைவர் பிறந்த நாள்
கொண்டாடும் மகிழ்ச்சியோடும்,
அபி
tags :
article on tamil cinema idol rajinikanth and rajini birthday celebrations
ரஜினி, ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் கட்டுரை, rajinikanth, rajini birthday celebration, tamil cinema, tamil cinema actor, rajini birthday celebrations
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments