
குரு பெயர்ச்சி பலன்கள் 2012 கன்னி ராசி guru peyarchi palangal 2012 kanni rasi
குருப் பெயர்ச்சி பலன்கள்:
கன்னி:
உத்திரம்(2,3&4), அஸ்தம்’ சித்திரை (1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.
வருகிற மே மாதம் 17ம் தேதி நிகழப்போகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். ரிஷபத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசியையும், 7-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் ,தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 5-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.சனி பகவான் இப்போது ஏழரைச் சனியில் , பாத சனியாக சஞ்சரித்து , உங்களுக்கு சோதனைகளைக் கொடுத்தாலும்கூட குருபகவானால், சனி பகவானுடைய தீய பலன்கள் கட்டுப்பட்டு கெடுபலன்களை ஏற்படுத்தாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.
குரு பகவானின் இந்த சஞ்சாரத்தின்போது நீங்கள் எழுத்துத் துறையிலும் பிரகசிக்க முடியும். சிலர் வெளிநாடு சென்று அகில உலக அளவில் தங்கள் படைப்புகளுக்காக விருது பெற முயன்று வெற்றியும் பெறுவார்கள். மிகவும் பிரபலமான பலகலைக் கழகங்கள் உங்களை உங்கள் படைப்புகளுக்காக கௌரவிக்கும் யோகமும் கடும் முயற்சிக்கு கிடைக்கலாம். எனவே உங்கள் எழுத்துத் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.
மொத்தத்தில் இது உங்களுக்கு யோகமான காலம்.
குருவின் பார்வை பலன்கள்:
இந்த சஞ்சாரத்தில் குருவின் மூன்று சுபப் பார்வைகளில் ஒரு பார்வை உங்களுடைய ஜென்ம ராசியின் மீதே ஒளி வீசுகிறது. அதனால்தான், ஊக்கமும், உடல்நலமும் தெளிவான தோற்றமும்முன்னேற்றங்களும் சுகபோக சௌகரியங்களும் நல்லபடியாக அமையும் என்று முன்னதாகவே குறிப்பிட்டோம். இன்னொரு சுபப் பார்வை உங்கள் தைரிய பராக்கிரம ஸ்தானத்தின்மீது வீசுகிறது. இதனால் தைரியமும் முயற்சி வேகமும் எதிர்ப்புகளை முறியடிக்கும் சக்தியும் விவகாரங்களில் வெற்றிகொள்ளும் வல்லமையும்,சந்தோஷகரமான அனுபவங்களும் உண்டாகும். இளைய சகோதரர்களுக்கும் இதே குருபார்வை முன்னேற்றங்களைக் கொடுக்கும். குரு பகவானின் மற்றொரு பார்வை புத்தி, புத்திர புண்ணிய அதிர்ஷ்ட ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் மனக் குழப்பமும் கலக்கமும் தீரும். தெளிவு ஏற்படும். சாமர்த்தியமான யுக்தி புத்தி யோசனைகள் புலப்படும். உருப்படியான எண்ணங்கள் உதயமாகும். நினைத்தபடி பல காரியங்கள் நடக்கும். எதிர்பார்ப்புகள் பலிக்கும். புத்திர பாக்கிய வழியில் ஏற்கெனவே சொல்லியபடி சகல நன்மைகளும் நடக்கும். தகுந்த சமயத்துக்கு உகந்த உதவிகள் அனைத்தும் வந்து சேரும். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அதிர்ஷ்டவசமான நல்ல சந்தர்ப்பங்களும் அமையக்கூடும். பக்தி மேம்படும் .இறைவழிபாடுகள் சிறந்தோங்கும். தெய்வம் துணை நின்று உங்களை வல்லவராகவும் வளம் உள்ளவராகவும் மாற்றும்.
குருவின் வக்கிர கால நிலை:
குரு பகவான் 5.10.12. முதல் 29.1.13. (3 மாதங்கள் 24 நாட்கள்) வரை வக்கிர சஞ்சாரம் செய்யப் போகிறார். குருவின் வக்கிர காலக் கட்டங்களில் இப்போது சொல்லிய அனைத்திலும் சுண்க்கம் ஏற்படும். ஒரு சுபக் கிரகம் நல்ல பலன் தரக்கூடிய இடத்தில் வக்கிரமானால், அந்த கிரகம் தரக்கூடிய நன்மைகள் குறையலாம், என்பது கோச்சார விதி. இதன்படி ஒன்பதாமிடத்துக் குருவின் வக்கிரகதி காலத்தில் குரு தரக்கூடிய நலல் பலன் குறையக்கூடும். இந்த நேரத்தில் எந்தப் புது முயற்சியும் தொடங்காமல் பொறுமைகாத்து இருப்பதும், நன்கு திட்டமிட்டபின் எதிலும் இறங்குவதும் கஷ்டங்களைக் குறைக்கும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று பகவானைத் தரிசித்து வரவும்.சனி பகவானின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக் கிழமைதோறும், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். எல்லாவித துன்பங்களௌம் உங்களை அண்டாமல் ஓடிப்போகும்.
வாழ்க வளமுடன்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments