திருவைராணிக்குளம்
ஆண்டுக்கு 11 நாள் மட்டுமே திறக்கப்படும் அம்மன் சன்னிதி, திருவாதிரை நாளில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் காலடி அருகே, திருவைராணிக்குளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பார்வதி தேவி சன்னிதி, ஆண்டுக்கு 11 நாள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காகவும், பிற பூஜைகளுக்காகவும் திறந்திருக்கும்
மாலை 4 மணிக்கு, பார்வதி தேவிக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் அடங்கிய திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.
ராமமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், அணையாத விளக்கில் இருந்து தீபமேற்றி ஊர்வலம் புறப்பட்டது.
அம்மனை பெரியவர் நாராயணன் நம்பூதிரிப்பாடு தலைமையில், இரவு 7.30 மணியளவில் ஊர்வலம், கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு சன்னிதி திறப்பதற்கான வைபவங்கள் துவங்கின. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில், சில சடங்குகள் செய்து திறக்கப்படும் சன்னிதி, காலை 4.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
.
கோவில் வட்டவடிவில் கற்றளியாக அற்புத அமைப்பில் ஒரே கருவறையில் முன்பக்கம் சிவனும் பின்பக்கம் அம்பாளும் அமைந்துள்ளது வேறு எங்குமே கண்டிராத அமைப்பு.
சிவ பூஜை முடித்து, சக்தி பூஜை செய்கிறார்கள்; அம்பாளை சாளரத்தின் வழி மட்டுமே தரிசிக்க முடியும்.சுயம்வர புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்தவர்களுக்கு பழக்கலவை பிரசாதம் தருகிறார்கள்.
கோவிலை முழுச்சுற்று வரமுடியாது. சிவனின் சடை பின் பகுதியில் விரிந்திருப்பதாக ஐதீகம்.அடையாளமாகக் குறிப்பிட்ட பகுதியை கடக்காமல் திரும்பி வர வேண்டும். பிரகாரத்தில் பெரிய நெல்லிக்காய் மரமும் ,மிகப்பெரிய அரசமரமும் மேடை கட்டப்பட்டு பழமையைப் பறை சாற்றுகின்றன. மிகப்பெரிய தெப்பக்குளமும் படித்துறையும் சுற்றிலும் பச்சையில் இத்தனை பச்சைகளா என்று வியக்க வைக்கும் விதவிதப் பச்சை இலைகளுடன் மரங்களும் செடிகளும் கொடிகளுமாக கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments