உலக ஒளி உலா - கலாசாரத்துக்கு ஒரு “கடம்பவனம்”!
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசனின் திருவிளையாடல்
தமிழர் பண்பாடும், கலாசாரமும் உலகம் போற்றும் உன்னதம் கொண்டவை. எனினும் இதன் பெருமை பற்றிய விழிப்புணர்வும் நம்மிடையே மெச்சும்படியாக இல்லை. அதேசமயம், வெளிநாட்டவர் நம் வரலாற்றுப் பாரம்பரியத்தையும், கலாசார அடையாளங்களையும் காண்பதற்காக தமிழகத்துக்கு ஆர்வத்துடன் வருவது அதிகரித்து வருகிறது.
இப்பாரம்பரிய பெருமையெல்லாம் நம் தலைமுறையுடன் முடிந்துவிடாமல் அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவும், அடுத்துவரும் தலைமுறையினரிடத்தில் எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டும் “கடம்பவனம்” எனும் பெயரில் “தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலத்தை” ஏற்படுத்தி வெளிநாட்டவரிடம் தமிழ் மரபு, கலைகளைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த கட்டடக் கலைஞரான கணபதியும், நாட்டியக் கலைஞரான அவரது மனைவி சித்ராவும்.
மதுரை நகரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லும் சாலையில் உள்ள வேம்பரளியில் அமைந்துள்ளது இந்தக் கடம்பவனம். மறைமலை அடிகளின் கொள்ளுப் பேத்தியான சித்ரா, இந்தக் கடம்பவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
“தமிழர்களின் பாரம்பரியமும், கலாசாரமும் சில நூற்றாண்டுகளில் முடிவுற்ற ஒரு நிகழ்வல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஒரு பொக்கிஷம்”. குறிப்பாக, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமைக்குரியது. சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த ஸ்தலம். மதுரைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பலரும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருமலை நாயக்கர் மகால் என்று ஒரு சில இடங்களை மட்டும் சில மணி நேரங்களில் பொழுதுபோக்காகப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
நமது வரலாற்றுச் சின்னங்களும், பாரம்பரிய விஷயங்களும் சில மணி நேரங்களில் பார்த்து அறிந்துகொள்ளும் விஷயமா என்ன? அவற்றின் ஒவ்வொரு வடிவமைப்பிலும் பல தகவல்கள், நுணுக்கங்கள் பொதிந்துள்ளன. அவற்றை நாம் மட்டும் உய்த்து உணராமல் வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கடம்பவனம்.2009ம் ஆண்டில் சுமார் 8 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடம்பவனத்தில் 4 ஏக்கரில் பண்பாட்டு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் 500 பேர் அமரக்கூடிய கோயில் வளாகம், சைவ உணவகத்துடன் கூடிய உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலால், மதுவுக்கு அனுமதியில்லை.
மாலை வேளையில் பரமபதம், பாண்டி, சொட்டாங்கல், பல்லாங்குழி போன்ற தமிழர்களுக்கு உரித்தான பாரம்பரிய விளையாட்டுகளில் சிறுவர்களை பங்கேற்கச் செய்து அதைச் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கட்டம் போட்டு நொண்டியடித்து விளையாடும் விளையாட்டைப் பார்க்கும் வெளிநாட்டினர், வெளிநாடுகளில் “ஹாப் – ஸ்காட்ச்” எனும் பெயரில் இதே போன்று விளையாடப்படுவதாகக் கூறுகின்றனர்.
முக்கிய விழா நாள்களில் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், பொங்கல் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதேபோன்று, கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம் பார்க்கவும், பாவைக் கூத்து ஆகியவற்றுக்காகவும் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யேக கோயில் வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. கலைக்கூட அரங்கில் கர்நாடக சங்கீதம், பரதம் மற்றும் கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், தேவராட்டம் போன்ற கிராமியக் கலைகளை திறம் வாய்ந்த கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்படுகிறது. இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்..
கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு உணவுக் கூடத்தில் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளான
- அப்பம்
- வரகு
- தினைப் புட்டு
- இடியாப்பம்
- சாமை அடை
- கேழ்வரகுப் புட்டு
- கறிவேப்பிலை சாதம்
- முருங்கை சூப்- கூட்டாஞ்சாறு
- சுக்குமல்லி காபி
ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதுடன், அவற்றை உண்பதால் உடல் நலத்துக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதையும் எடுத்துரைக்கப்படுகிறது.
மாலை முதல் இரவு வரை நடைபெறும் இந்தச் சுற்றுலா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணமாக (இரவு உணவுடன் சேர்த்து) நபருக்கு ரூ.325ம், வெளிநாட்டினருக்கு நபருக்கு ரூ.800ம் வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர, சுற்றுலா கிராமம் எனும் பெயரில் 4 ஏக்கரில் தங்கும் வசதிகளுடன்கூடிய குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரும்பும் நாள்களுக்குத் தங்கியிருந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு நேரில் சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
நம்மிடம் உள்ள பாரம்பரிய, கலாசாரச் சின்னங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆனால், அவை பற்றிய தகவல்கள் உரிய முறையில் பிற நாடுகளை இன்னும் சென்றடையவில்லை. அதற்கான சிறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே, ஜெர்மன், இலண்டனில் நடைபெற்ற சுற்றுலாக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தற்போது எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடம்பவனத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதுதவிர, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களை அழைத்து வந்து கடம்பவனம் பண்பாட்டு மையத்தில் வாழ்வியல் முகாம்களை நடத்தி வருகிறார்கள்.இதில், மாணவர்களுக்குத்
- தமிழர்களின் பாரம்பரியம்
- ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை
- விளையாட்டுகள்
- தமிழ்மொழிப் பயிற்சி
- நன்னெறிக் கதைகள்
ஆகியவற்றைக் கற்றுத் தருகிறார்கள்.
உள்ளூர் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி – வினா போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
விரும்பும் பள்ளிகள் அணுகினால்
( http://www.kadambavanam.in/ index.html ) இதுபோன்ற பயிற்சிகளை அளிக்கத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments