கணபதி சரணம்! கணபதி சரணம்!!
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
அக்னி வைத்த நெற்றிக் கண்ணனும்
ஆதிபராசக்தி அன்னையும்
என் மகன் என் மகனென்று மடிவைத்து
கொஞ்சி விளையாடும் அஞ்சுகர பாலன்
காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே
கணபதி சரணம் அனுதினம் வரனும்
உந்தன் வரவு எங்களுக்கு புதிய உறவு
யானை முகத்தவனே என்குட்டி மன்னனே
விநாயக பெருமானே என் வணக்கம் அய்யா
மனம் கோணாமல் மனமார வரம் அருளும் அய்யா
எந்தன் விநாயக பெருமானே சித்தி விநாயகனே போற்றி போற்றி
பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.
தேன் குடிக்கும் பிள்ளையார்
ஸ்வேதவிநாயகர்
பிரளயம் காத்த விநாயகர்
“மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு”, என்ற வழக்கு
மிகப் பொருந்தும்.சிறிய உருவம். திருவலஞ்சுழியில் உள்ள பிள்ளையாரை “வெள்ளைப் பிள்ளையார்”என்றும் “ஸ்வேத விநாயகர்” என்றும் அழைப்பார்கள்.
பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் தோன்றாமையினால், தேவர்கள் கடல் நுரையைப் பிடித்து வைத்து விக்னேசுவரப் பூசை செய்ததாக ஐதீகம். மூர்த்தமும் வெள்ளை நிறமாக இருக்கிறது. வாணி, கமலா என்னும் இரு தேவியர் உற்சவமூர்த்திக்கு இரு மருங்கிலும் இருக்கின்றனர். இவர்தான் அந்த கோயிலின் முக்கிய மூர்த்தியாக இருக்கிறார்.
ஆகவேதான் இந்தத் தலத்திற்கு “வலஞ்சுழி” என்று பெயர் என்றும் சொல்வார்கள்.
அருகே ஓடும் ஆறு, இந்தத் தலத்தின் அருகே வலப்புறமாக சுழித்துச் செல்வதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
சூரியனும், சனிக் கிரகமும் பகைக் கிரகங்கள் ஆகும். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சூரியன் ஓரிடத்திலும், சனி மற்றொரு இடத்திலும் இருப்பதைத்தான் காண முடியும்.
ஆனால் தஞ்சாவூர் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் இந்த இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன.
இங்கு இவர்கள் இருவரும் நட்பு நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
பிரளயம் காத்தவர்
கும்பகோணத்திற்கு அருகிலேயே ஐந்து மைல் தூரத்தில் உள்ள திருப்புறம்பியம் என்னும் தலத்தில்தான் பிரளயம் காத்தவிநாயகர் இருக்கிறார்.
ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்திலிருந்து தற்போதைய திருப்புறம்பியம் தலத்தைக் காக்க தந்தையின் ஆணைப்படி விநாயகப் பெருமான் ஓம்காரத்தினை பிரயோகித்து ஏழு கடல்களின் சக்தியையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். பிரளயம் காத்தார். பிரளயம் காத்த பிள்ளையாரானார்.
பிரளயத்திற்கு புறம்பாக, பிரளயத்தை மீறியதால் இத்தலத்தை திருப்புறம்பியம் என்றழைத்தனர்அப்போது வருணன் கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார்.
விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது. ஆகவே பிள்ளையாருக்கு “பிரளயம் காத்த விநாயகர்” என்ற பெயர் ஏற்பட்டது. விநாயகரின் திருமேனி சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் . சங்கு, கடல்நுரை, நத்தான்கூடு போன்ற கடல் பொருட்களால் ஆனது.
இந்த பிள்ளையாருக்குத் “தேன் குடிக்கும் பிள்ளையார்” என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். . இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். ஆச்சரியம் என்னவென்றால் அவ்வளவு தேனையும் விநாயகப் பெருமான் தன் திருமேனி மூலம் உறிஞ்சிக் கொள்வார்! தேனபிஷேகத்தின்போது செம்பவள மேனியனாக ஜொலிப்பார். அதனாலேயே இவரை தேன் உறிஞ்சும் பிள்ளையார் என்றும் அழைக்கிறார்கள். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்கிறது. ஒரு டன் தேன் அவ்வாறு உறிஞ்சப் படுவதாக கணித்திருக்கிறார்கள்.சந்தனநிற சுயம்புவானஇந்த அபிஷேகக் காட்சியை காண்போர் கோரும் வரங்கள், அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் ஈடேறி விடுகின்றன.
கும்பகோணத்திற்கு வடமேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.
சொல் கேட்கும் பிள்ளையார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் உள்ள விநாயகரை வித்தியாசமாக “சொல் கேட்கும் பிள்ளையார்” அல்லது `சொல் கேட்டான் பிள்ளையார்’ என்று அழைக்கிறார்கள். பேச்சு வழக்கில் சொக்கட்டான் பிள்ளையார் என்கிறார்கள்.
பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அருள்புரிகிறார் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
காலப்போக்கில் இந்தப் பெயர் மாறி `சொக்கட்டான் பிள்ளையார்’ என்றாகிவிட்டது.
வேலூரிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது
சேண்பாக்கம். 1677ம் வருடம், துக்கோஜி என்ற மராட்டிய மந்திரியின் கனவில் தோன்றிய கணபதி, தன்னுடைய பதினொரு மூர்த்தங்கள் அத்தலத்தில் புதைந்திருப்பதாகவும் அவற்றைக் கொண்டு கோயில் கட்டுமாறும் அறிவுறுத்தினார். உடனே துக்கோஜி அங்கே அழகான சிறிய கோயிலை அமைத்தார்.
கோயிலில், பாலவிநாயகர், நடன விநாயகர், ஓங்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி&புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து, ஓம் எனும் பிரணவ வடிவத்தில் இருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தைச் சொல்லும் ஞான மூர்த்திகள் அவை. ஏனெனில் அந்த விநாயகர்கள், எந்த உருவமுமற்று வெறும் கோளங்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் உற்றுப்பார்த்தால், விநாயகர் நிழலாய் மறைந்திருப்பது புலப்படும். இதுதான் சேண்பாக்கத்தின் சிறப்பம்சம். ஆறாவதாக உள்ள செல்வ விநாயகர் தினமும் அபிஷேகம் பெறுகிறார்.
ஆழத்துப் பிள்ளையார்
திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தினுள், ஆழத்துப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். 18 அடி ஆழத்தில் உள்ளதால் இந்த விசித்திரப் பெயர்! ஷோடச கணபதிகளை (16 வித பிள்ளையார் உருவங்கள்) நினைவுபடுத்தும் விதமாக பதினாறு படிகள் உள்ளன. நுண்ணியதாக, அணுவுக்குள் அணுவாக அமைந்து எல்லாவற்றிற்கும் ஆதார சக்தியாக வெகு ஆழத்தில் அமைந்து இவர் ஆட்சிபுரிகிறார் என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது. எல்லோராலும் அறியப்பட்ட ‘திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்….’ என்று தொடங்கி, ‘பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்’ என்று முடியும் பதிகம் இத்தல ஆழத்துப் பிள்ளையாரைப் பற்றியதுதான். விநாயகருக்கான அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments